"அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. அதை பயன்படுத்துவோரின் கையில் தான் ஆக்கமும் அழிவும் இருக்கிறது" என, "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசினார். கோவை மாவட்ட அளவிலான 21வது குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாடு சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் நடந்த இந்த மாநாட்டில்,
பள்ளி குழந்தைகளின் சிறந்த படைப்புகள் கண்டறியப்பட்டு அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி அளிக்கப்படும். கோவை மாவட்ட அளவில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் பங்கேற்றன. துவக்க விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வேலுசாமி தலைமை வகித்தார். விழாவில் "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசியதாவது: "அறிவியலை மாணவர்கள், கற்றல், கேட்டல் மட்டுமின்றி, எதையும் கைப்பட செய்து பார்த்தால், அதை மேம்படுத்தும் யோசனைகள் வரலாம். புதியவற்றை கண்டுபிடிக்கும் எண்ணம் உருவாகும். கற்றல், கேட்டலோடு மட்டுமின்றி செய்முறையும் அவசியம். மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளை பெற வேண்டும். அறிவியல், தொழில்நுட்பங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமின்றி, அழிவுக்கும் வித்திடுகிறது என்பது பலரது வாதமாக இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தின் நன்மைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. ஆக்கமும், அழிவும் நம் கையில் தான் உள்ளது." இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment