Thursday, 19 December 2013

இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே ஐ.நா. நிரந்தர பணிக்கு மாற்றம் !!!

 

                            புதுடெல்லி, டிச.18 : அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது. 

                            இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் தூதர் கைது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், “அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் சதி உள்ளது. சதி திட்டத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார். துணை தூதரின் கவுரவத்தை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

                            கைதான பெண் துணை தூதர் திரும்ப அழைக்கப்படுவார். அவரை திரும்ப அழைத்து வருவது நமது பொறுப்பு” என்று கூறினார். இந்நிலையில், அவரை நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவர் முழு ராஜதந்திர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 

                             இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், “நமது தகவல் சத்தமாகவும், தெளிவாகவும் அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல புரிந்துணர்வு கொண்ட இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சம்பவங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துமென்றும், இச்சம்பவத்தில் தொடர்புடைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்