Thursday, 18 September 2014

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்!!!


                          தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி, டெண்டர் மூலம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலி அட்டை தயாரிக்கப்படுவதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

                              சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.இரண்டு நாட்களில், மேலும், 20 மாவட்டங்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். அடுத்த ஓரிரு நாளில், மீதமுள்ள மாவட்டங்களுக்கு வந்து சேரும்.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, ''வண்ண வாக்காளர் அடையாள அட்டை, இதுவரை வந்தவற்றை அந்தந்த மாவட்டங்களில், உடனடியாக வினியோகம் செய்யும் பணி துவங்கும். ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், அவற்றை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

கட்டணம் வசூல்? 

                        வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அதை தொலைத்தவர்கள், மீண்டும் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, நிறைவு பெற்றதும், அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்